இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையப்படுத்தி விஜய் மகேந்திரன் தொகுத்துள்ள சிறுகதை தொகுப்பு இருள்விலகும் கதைகள். இதை தோழமை பதிப்பகம் வெளியீட்டுள்ளது.
நான் வாசித்து அறிந்தவரை இந்திய மொழிகளிலே தமிழில் தான் சிறுகதை அதன் உச்சபட்ச சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு விதமான கதை சொல்லும் முறைகள், கதைமொழி, வடிவ சோதனைகள், பின்நவீனத்துவன எழுத்து முறை, தலித்திய, பெண்ணிய சிந்தனை சார்ந்த சிறுகதைகள் என்று தமிழ் சிறுகதைகள் உலகின் சிறந்த சிறுகதைகளுக்குச் சமமாக எழுதப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் போக்கு திசைமாற்றம் கொள்கிறது. புதுமைபித்தனின் துவங்கி இன்று எழுதிக் கொண்டிருக்கும் இளம்படைப்பாளி வரை சிறுகதை அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் அபரிமிதமானது.
நல்ல சிறுகதைகள் இன்று அதிகம் எழுதப்படவில்லை. வெளியான போதும் கவனம் பெறுவதில்லை என்ற பொதுக்குற்றசாட்டை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத்துவங்கிய இளம் எழுத்தாளர்களில் பலர் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக்களமும் இருக்கிறது. எனது ஒரே குறை அவர்கள் தொடர்ந்து எழுதுவதில்லை�என்பது மட்டுமே
விஜயமகேந்திரன் இலக்கிய வாசிப்பிலும் எழுத்திலும் தீவிரமாக இயங்கிவருபவர். அவர் வா.மு.கோமு, சுதேசமித்ரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ். செந்தில்குமார், பாலை நிலவன், லட்சுமி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய மகேந்திரன், புகழ், என். ஸ்ரீராம் ஆகியோரின் சிறுகதைகள் கொண்ட இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். சமகால சிறுகதைப் போக்கின் குறுக்குவெட்டு தோற்றத்தை இந்தக் கதைகளின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது என்பது இத்தொகுப்பின் விசேசம்
இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒரு முன்மாதிரி மட்டுமே. இதற்கு வெளியில் நம்பிக்கை தரும் சிறுகதை எழுத்தாளர்களாக மனோஜ், பவா.செல்லதுரை, காலபைரவன், அசதா, தமிழ்மகன், திருச்செந்தாழை, சந்திரா, ஹசீன், திசேரா, உமா சக்தி, லதா.(சிங்கப்பூர்) பாலமுருகன் (மலேசியா), போன்றவர்களை குறிப்பிடலாம்.
இன்றைய சிறுகதையின் பலம் அதன் கதை சொல்லும் முறை. கதாபாத்திரங்களை உருவாக்கி அதன் பின்னே நிகழ்ச்சிகளைத் தொடரச் செய்யும் சம்பிரதாய கதைசொல்லல் இன்று புறந்தள்ளப்பட்டுவிட்டது. கதை சொல்லும் குரலும் அது சுட்டிகாட்டும் இடைவெட்டு நிகழ்ச்சிகளும். அந்த நிகழ்வின் வழி வெளிப்படும் மனநிலையின் தீவிரமும். மொழித்தளங்களுமே இன்று சிறுகதையின் முக்கிய அம்சங்கள்.�
இந்ததொகுப்பில் அப்படி மாறுபட்ட கதை சொல்லும் முறைகளும் கதைமொழியும் காணமுடிகிறது.
வா.மு.கோமுவின் நல்லதம்பியின் டைரி குறிப்புகள் கதை அதன் சொல்லும் முறையால் பகடியும், அக எள்ளல்களும் கொண்டதாக உள்ளது. வா.மு. கோமுவின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரது எழுத்தின் பலம் அதன் பளிச்சிடும் நகைச்சுவை. அது அசலானது. பலநேரங்களில் வாசிப்பவனை வாய்விட்டுச் சிரிக்க வைக்ககூடியது. அடிநிலை மக்களின் வாழ்விலிருந்து எழும் அந்த பகடியை கோமு சிறப்பாக கையாளத் தெரிந்தவர். அவரது கதாபாத்திரங்கள் வாழ்வின் உன்னதங்களை விடவும் அன்றாடச் சிரமங்களையும், அதிலிருந்து உருவாகும் அபத்த நிலைகளையும் முன்வைப்பவர்கள். இக்கதையிலும் நல்லதம்பி என்ற மையக்குரல் வழியாக இடைவெட்டி செல்லும் அபத்தமும் வலியை மறைத்துக் கொண்ட பகடியும் அழகாக வெளிப்பட்டுள்ளது.
சுதேசமித்ரன் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து இணையத்திலும் சிற்றிதழ்களிலும் எழுதி வரும் தீவிர படைப்பாளி. அவரது சிறுகதையின் துவக்கமே கதையின் மையதொனியை அழகாக வெளிப்படுத்துகிறது. பழனியை ஒரு மாபெரும் சவரக்கத்தி போல அவர் உருவகப்படுத்துவதும் அதன் ஊடாக வெளிப்படுத்தும் அங்கதமும் இந்த கதையின் தனிச்சிறப்பு. கதை இயங்கும் தளத்தை விவரிக்கும் கேலியும், பழனி ஒரு வணிக மையமாகிப்போன அபத்த சூழலும் கதையில் நுட்பமாக பதிவு செய்யபட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க எஸ் ராமகிருஷ்னணின் வலையுடன் இணைக.
நன்றி.
http://sramakrishnan.com/view.asp?id=312&PS=௧
...