நேர்காணல் :- சரிதா ஜோ
உங்கள் எழுத்துப்பயணம் எங்கிருந்து தொடங்கியது?
எல்லோரையும் போல முதலாக
சூரியனுக்கும், நிலாவுக்குமான நான்கு வரி, ஐந்துவரிக்கவிதைகள் எழுதத்துவங்கியவன் தான்
நான். 80-களின் இறுதியில் அவ்விதமான கவிதைகளை நான், என் தந்தையாருக்கு அஞ்சலில் வந்துசேரும்
சிற்றிதழ்களில் வாசித்திருந்தேன். அவைகளில் மரத்தைப்பற்றி எழுதப்பட்டிருந்த கவிதையை
வாசித்தால், என்னால் மரத்தைப்பற்றி கவிதையாய் என்ன சொல்ல முடியுமென யோசிப்பேன். ஒன்றும்
தோன்றாவிட்டால் அதை விட்டு விடுவேன். என் தந்தையார் நல்ல வாசிப்பாளர். இலக்கியப்பத்திரிக்கைகள்
மட்டுமே வாசிப்பவரான அவர் என் அம்மாவுக்காக குமுதம், ராணி, ஆனந்தவிகடன், தாய், சாவி
என்று வார இதழ்களையும் வாங்கிவந்துவிடுவார். நான் அவைகளைத் தான் முன்பாக வாசித்தேன்.
86-களில் தான் நான் கவிதையென எழுதிப்பழக ஆரம்பித்தேன். போகப்போக கிரைம் நாவல்கள் பக்கம்
வாசிக்கத்திரும்பினேன். நான் முயற்சித்த முதல் சிறுகதையே ஒருவன் பொம்மையை கத்தியால்
குத்தி கொலைசெய்யும் கதைதான். அது எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. 89-லேயே கோவையில்
நான் ‘ஊன்றுகோல்’ என்னும் சிற்றிதழ் நடத்தினேன். அந்தசமயத்தில் மாலைமுரசு கோவைப்பதிப்பில்
தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.
சிறார் கதைகள் எழுதும் ஆர்வம் வந்தது எப்படி?
91-ல் நான் திருப்பூர் வந்துவிட்டேன். அந்தசமயத்தில் என் இரண்டு
வருட கால எழுத்து முறைமையிலிருந்து மாறிவிட என் வாசிப்புமுறைமைகள் மாறிவிட்டதுதான்
காரணம். அசோகமித்ரன், ராஜேந்திரசோழன், சுந்தரராமசாமி என்று வாசிக்கையில் என் எழுத்தானது
நான் பார்த்த, கேட்ட விசயங்களை எப்படி கதையாக்குவது என்று முயற்சித்தேன். அதில் வெற்றியும்
பெற்றேன். என் தந்தையார் நான் எழுதும் கதைகளை வாசித்து முதல் விமர்சகராக இருந்தார்.
கொசுவானது கடித்துக்கடித்து கொசுவாகவே மாறிடும் ஒருவனை எழுதியிருந்தேன். முடிவில் கனவு
என்று சொல்லி முடித்திருந்தேன். ‘கனவென்ன கனவு? அதை எடுத்துடு. கொசுவாவே அவன் இருக்கட்டும்!’
என்றார்.
நான் எழுதிய பல சிறுகதைகளில்
என் சிறுவயது சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றே வந்தன. சில விமர்சகர்கள் கூட அவற்றை
கவனித்து என்னிடம் பேசுகையில், ‘இலக்கியத்தில் சிறார்கள் பற்றி எழுதுறது குறைவா இருக்கு
கோமு. உங்க கதைகள்ல வர்ற சிறார்கள் ரொம்ப இயல்பா இருக்காங்க! தொடர்ந்து அவங்களை சொல்லு’
என்றார்கள். நான் வாசித்த இலக்கியங்களில் ஒருசில கதைகளே அவ்விதம் சிறார்கள் இடம்பெற்று,
அவைகள் வெற்றிக்கதைகளாக இருப்பதையும் பின்பாக உணர்ந்தேன்.
தமிழில் சிறார் புத்தகங்களை
முன்பாக வாண்டுமாமா, பெரியசாமிதூரன், அழ.வள்ளியப்பா, நீலமணி, நாரா. நாச்சியப்பன் என்று
குறைவானவர்களே எழுதிவந்தார்கள். அவர்கள் வெற்றிகரமாகவும் செயல்பட்டார்கள். கடந்த பத்துவருடங்களில்
பல எழுத்தாளர்கள் தமிழில் நேரடியாக சிறார்கதைகள் எழுத வந்துவிட்டார்கள். அதில் நானும்
ஒருவனாகியிருக்கிறேன். ஆர்வம் என்பது, ’ஒருவிசயத்தை நம்மால செய்ய முடியாமல் போயிடுமா?
பார்த்திடுவோம்!’ என்ற தூண்டுகோலினால் தான் சிறார்கதைகள் நான் எழுதத்துவங்கியது.

சிறார் கதைகளில் வட்டார வழக்கு பயன்பாடு பற்றிய தங்கள் கருத்து?
ஏற்கனவே கி.ராஜநாரயணன்
வெற்றி பெற்றிருக்கிறாரே! பேச்சு மொழியில் அவர் பல அரிய விசயங்களை தமிழுக்குத்தந்துள்ளார்.
வட்டாரவழக்கு தேவைப்படும் கதைகளில் நான் அப்படியே சொல்லிவிடுகிறேன். ஆனாலும் முடிந்த
அளவு குறைத்துக்கொள்ளவும் செய்கிறேன். பல பகுதிகளுக்கு இப்போது சிறார் புத்தகங்கள்
பயணிக்கின்றன. முடிந்த அளவு பொதுத்தமிழில் சொல்வது தான் சரியாக இருக்கும். வாசிக்கும்
சிறுவர் சிறுமிகளுக்கு சிரமம் இருக்காது. ஒரு கதையை, சொல்லல் முறையில் நான் எளிதாக
வெற்றிபெற்றிருக்கிறேன். யார் வாசித்தாலும் கதைப்போக்கினுள் அவர்களை கையைப்பிடித்து
கூட்டிச்செல்லும் பக்குவம் என் எழுத்தில் உண்டு. அது வட்டார எழுத்து என்றாலும் கூட!
சிறார் குறுநாவல்கள் மட்டுமே எழுதி இருக்கிறீர்கள். அதற்கான
காரணம் என்ன?
ஒரு தலைப்பு ஒரு கதை!
நான் யோசித்து முடிவெடுக்கும் கதையை மனதினுள் வைத்திருந்து அதை மெருகேற்றுகிறேன். நான்கு
அல்லது மூன்று அத்தியாயங்களை பிரிக்கிறேன். அது எனக்கு வசதிப்படுகிறது. எல்லா நேரமும்
நான் சிறார்கதைகள் எழுதிக்கொண்டே இருப்பதில்லை. நான் பலவழிகளில் இறங்கி பணிசெய்வது
உங்களுக்கு தெரியும். இந்தமுறை இரண்டு மாதம் முழுக்க சிறார் புத்தக வாசிப்பில் மட்டுமே
இருக்கிறேன். இந்த சமயத்தில் நான் இலக்கியமென்று எதையும் படிப்பதில்லை. மனநிலையை ஒரு
நேர்கோட்டில் வைத்திருக்க, மந்திரவாதியாகவும், இளவரசனாகவும், சிங்கமாகவும், கரடியாகவும்
நான் மாற்றமடைந்துகொண்டே இருக்கிறேன்.
குறுநாவல்கள் என்பது மிக
நீண்ட ஒரு சிறுகதை தான். குறைந்தபட்சம் 4500 வார்த்தைகளில் முடித்துக்கொள்கிறேன். அது
சிறிய புத்தகமாக அழகாக அச்சில் வந்துவிடுகிறது. சிறார்கள் வாசிக்க எளிமையாகவும் இருக்குமென்ற
நம்பிக்கையில் எழுதுகிறேன். குறைந்த வார்த்தைகளில் எழுத இந்தமுறை முயற்சித்து எழுதியிருக்கிறேன்.
சிறார் இலக்கியத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்களின் பங்கு பற்றி?
அம்மா தன் குழந்தைக்கு
சாப்பாடு உருட்டி ஊட்டுகையில், ‘நிலா நிலா ஓடிவா’ என்று நிலாக்காட்டியும், ‘சாப்பிடலைன்னா
பூச்சாண்டி வந்து புடிச்சுட்டு போயிடுவான்!’ என்று மிரட்டியும் இருவிதமான ஊட்டல்முறைகள்
இருப்பது போலத்தான் இதுவும். எல்லாமும் சரியாக (வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி) அமையப்பெற்ற
குழந்தைகள், தங்களுக்காக இத்தனை விசயங்கள் உள்ளனவென்று தெரிந்துகொள்வார்கள். ஆசிரியர்கள்
என்றுமே சிறுவர்களுக்கு கதைப்புத்தகங்களை படிப்பதைவிட பாடப்புத்தகங்களை வாசித்தால்
நல்ல மதிப்பெண் பெறலாமென்றுதான் கூறினார்கள். இப்போது நிலைமை அப்படியே மாறியிருக்கிறது.
சமீபத்தில் என் நண்பர் தன் பிள்ளையை கான்வெண்ட் பள்ளியில் சேர்க்கையில், அவரைப்பற்றி
கேட்டறிந்திருக்கிறார்கள். தானொரு புதிய எழுத்தாளரும் கூட! என்று சொல்லியிருக்கிறார்.
ஆசிரியர்கள், ‘அப்படியெனில் பள்ளியில் குழந்தைகளுக்காக கதை சொல்வீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
‘அதுக்கென்னங்க, வந்து சொல்லிட்டாப்போச்சு!’ என்று சொல்லிய தகவலை என்னிடம் பகிர்ந்தார்.
எதுவாகினும் இன்றைய சிறார்கள்
பாட்டியிடமோ, தாத்தாவிடமோ கதைகள் கேட்டு மகிழ்வதில்லை. புத்தகங்கள் தான் அவர்களுக்கான
அறிவைத்தரும். அதை பெற்றோர்களும் ஆதரிக்க வேண்டும் தான்.

இளையோர்களுக்கான கதைகள் எழுதும் யோசனை உள்ளதா?
இளையோர்களுக்கான படைப்புகள்
எழுதியிருக்கிறேன். எல்லோருக்குமான படைப்பாக ‘டுர்டுரா’ குறுநாவல் எழுதியிருக்கிறேன்.
அதில் இளையோர்கள் தான் நாயகர்கள். எதையும் நான் முன்பாகவே திட்டமிடுகிறேன். அதன்படி
செயல்படுகிறேன்.
கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது?
வாசிப்பிலிருந்து தான்.
என்னிடம் யார் பேசினாலும் அவர் சொல்லும் விசயங்களில் புதியதாய் என்ன சொல்கிறார்? என்று
கவனிப்பேன். ஆனால் நான் கவனிப்பது அவருக்கே தெரியாது. நண்பர் ஐய்யம்பாளையம் பள்ளியில்
வாசித்தவர். அவர் பேச்சோடு பேச்சாக, ‘நேற்று ஊர்ல செரியான மழைங்க கோமு. காத்து சும்மா
வளைச்சு வளைச்சு வீசுச்சு. எங்கூர் நடுநிலைப்பள்ளியில பசங்க வளர்ந்துன வாழைமரமெல்லாம்
சாய்ஞ்சிடுச்சுங்க!’ என்றார். அவ்வளவுதான். அவர் சொன்ன விசயத்தினுள் கதை இருப்பது தெரிந்துவிட்டதே!
‘சுப்பிரமணி கொப்பரைத் தேங்காய்’ என்கிற குறுநாவல் அப்படி உதயமானது தான். ஆங்கிலப்படங்களில்
பார்த்தால் சிறிய விலங்கைக்கூட மிகப்பெரிதாய்க்காட்டி ஊரையெல்லாம் அழிப்பதாகவும், பின்பாக
மனித சக்தி அதை வெல்வதாகவும் பல பார்த்திருக்கிறோம். அதைப்பற்றி யோசிக்கையில் உதயமானது
தான் ‘கட்டெறும்பு’ குறுநாவல். இப்படி ஒவ்வொரு கதைக்குள்ளும் விசயங்கள் இருக்கிறது.
இவற்றை சிறார்களுக்கா, பெரியோர்களுக்கா? யாருக்காக எழுதுவது? என்கிற யோசனையும் வரும்.
ஏனென்றால் ஒரு கதையை எழுத்தாளன் யாருக்காக வேண்டுமானாலும் எழுதும் சாமார்த்தியம் மிக்கவன்.
சிறார்களுக்கு நூல் எழுதுவதில் உள்ள சவால் என்ன?
அவர்களுக்கு விருப்பமாக
கதையை கொண்டு செல்கிறேனா? ஆமாம் கொண்டு சென்றே ஆகவேண்டும் என்பதே சவால் தான். ’கபி
என்கிற வெள்ளைத் திமிங்கலம்’ என்கிற குறுநாவலை சவாலாக எடுத்துக்கொண்டு எழுதினேன். இதற்காக
கடல் பற்றியும், கடல்வாழ் விலங்கினங்கள் பற்றியும் தெரிந்துகொண்டு எழுதத்துவங்கினேன்.
எனக்கு அறியாத இடம் அது. இதே போல் ஸ்பேஸ் கதைகள் எழுதவும் ஆர்வமிருக்கிறது. தொடர்ந்து
எழுதுகையில் அதை நோக்கி நகர்வேன்.
உங்கள் கதைகளில் மாயம் மந்திரம் சூனியக்காரி இப்படி கதாபாத்திரங்கள்
சில கதைகளில் வந்திருக்கிறது. இதுபற்றி? இதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா?
சிறார்கள் இப்படித்தான்
என் வாசிப்பு இருக்குமென்று சொல்வதில்லை. வெற்றிபெற்ற படமான ஹாரிபாட்டரில் மாயங்கள்
இருக்கத்தான் செய்தன. சிறுவயதில் என் அப்பிச்சியிடமிருந்து தான் நெருப்புக்கோழி அரக்கி,
நெற்றிக்கண் ராட்சதன் என்கிற மாயாஜால, இந்திரஜால புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அந்தசமயத்தில்
ஆர்வமோடுதான் வாசித்தேன். இன்னமும் எனக்குப்புரியாதது மாயாஜாலம் இந்திரஜாலம் இதெல்லாம்
வேறு வேறா? இது இப்படியிருக்க அந்த வகைமையில் நானும் எழுதிய கதைகள் தான் அவைகள். சிறார்களுக்கு
சுவாரஸ்யத்தை கொடுக்க சூனியக்காரிகளும், மந்திரவாதிகளும் தேவைதான். இவர்களின் சதிகளையெல்லாம்
முறியடித்து வெற்றிபெற ஒரு வீரனும் தேவைதான். அவர்களுக்கு அது ஒரு கதைப்புத்தகம்.
காஞ்சனா என்கிற திரைப்படம்
வந்தபொழுது உறவினர்களின் பிள்ளைகள் வீடு வந்திருந்தால் அவர்களாக கதை பேசிக்கொண்டிருப்பார்கள்.
‘காஞ்சனாப்பேயி வந்துச்சா?’ என்று ஒருபிள்ளை ஆரம்பித்தால் மற்றொருபிள்ளை, ‘உடனே எல்லாம்
வராது.. புளுகக்கூடாது!’ என்று வாயை அடைத்து வரிசையாக கதையை சொல்ல வைத்து விடுவார்கள்.
என் மகனே கூட டிவியில் மாலையில் ‘காஞ்சனா’ திரைப்படம் திரையிடுகிறார்கள் என்றால் மதியத்திலிருந்து
ஊருக்குள் சென்று தெரிந்த வீட்டிலெல்லாம் சொல்லி வந்துவிடுவான். டிவியில் படம் ஓடுகையில்
ஆள் அங்கே இருக்க மாட்டான்.
பெரியவர்களுக்கு எழுதியிருக்கிறீர்கள், சிறார்களுக்கும் எழுதியிருக்கிறீர்கள்.
இதில் எது கடினம்?
பொதுவாகப்பார்த்தால் சிறார்களுக்கு
எழுதுவது கடினம் என்றுதான் சொல்வேன். பெரியவர்களுக்கு எழுதுவது ஆரம்பத்திலிருந்தே பழகிவிட்டதால்
அது எளிமையாகப்படுகிறது. சித்திரமும் கைப்பழக்கம் தான். ஆனால் தொடர்ந்து நான் திடீரென
திட்டமிட்டு ஒரு வருடகாலம் குழந்தை இலக்கியம் மட்டுமே படைப்பேன் என முடிவு செய்துவிட்டால்,
அதுவும் இரண்டு மாதத்திற்குள்ளாகவே எளிமையாக பழகிவிடும்.
இதுவரை உங்களின் சிறார் படைப்புகளின் மீது விமர்சனமோ, பாராட்டோ
வந்ததில் மறக்க முடியாதது?
தனியாக யாரையும் என்னால்
பிரித்துச் சொல்லமுடியவில்லை. முதலாக பாரதி புத்தகாலயம் வாயிலாக புத்தகங்கள் வெளிவந்தபோது
ஐந்து புத்தகங்களையும் வாசித்தவர் சொல்லியது நினைவில் இருக்கிறது. ‘சமரசம் செய்துகொள்ளாமல்
எழுதுகிறீர்கள்!’ என்று. இதைப்போல் ஒரு வரி விமர்சனங்கள் அலைபேசியில் பல கேட்டிருக்கிறேன்.
’என் பெயர் ராஜா’ குறுநாவலை சிறார்களே விமர்சித்திருக்கிறார்கள். இப்படி பலவுண்டு.

படக்கதைகள், காமிக்ஸ் மாதிரியான நூல்கள் எழுதும் யோசனை உள்ளதா?
அதற்கான ஓவியர்கள் கிடைத்தால்
நிச்சயம் செய்யலாம். காமிக்ஸ் புத்தகங்களை இன்றுவரை நான் வாசிக்கிறேன். ஆனால் அவைகள்
வர்ணங்களில் உயர்ந்த தாள்களில் வருகின்றன. வர்ணங்களில் வரும் காமிக்ஸ் புத்தகங்களை
இன்றைய சிறார்கள் விரும்புகிறார்கள். எனக்கு ஈடுபாட்டோடு வாசிக்க முடியவில்லை. நான்
வாசிக்கத்துவங்கிய காலத்தில் லாரன்ஸ்-டேவிட், வேதாளன், இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரெக்
என்று நாயகர்கள் இருந்தார்கள். எல்லாமும் என் அப்பிச்சி உபயத்தால் தான். அவர் காமிக்ஸும்
படிப்பார் தொடர்ந்து மாலைமதி நாவலும் படிப்பார். நானும் அப்படித்தான். இதுதான் வாசிக்க
வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் என்னிடமில்லை. சமீபமாக டெக்ஸ்வில்லர் கதைகள் என்றால் அதிக
சுவாரஸ்யத்துடன் வாசிக்க முடிகிறது. ராணி காமிக்ஸ் ஜேம்ஸ்பாண்டின் ‘அழகியைத்தேடி’ புத்தகத்தை
முதலாக 1984-ல் கொண்டுவருகிறது. அது வந்துவிட்டதை அறிந்தவன் 16 கி.மீ சைக்கிளில் பயணித்து
வாங்கிவந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்ந்து 50 இதழ்கள் வரை என் சேமிப்பில் இருந்தது.
பின்பாக வாசிப்பாளர்களுக்கு கொடுத்துவிட்டேன்.
ஏற்கனவே வெளிவந்த ஒரு
வெற்றிபெற்ற குறுநாவலை பதிப்பகம் ஓவியரைக்கொண்டு வரைந்து காமிக்ஸ் வடிவில் கொண்டுவரலாம்.
சமீபத்தில் வெளிவரும் சிறார் படைப்புகளை வாசிப்பீர்களா? உங்களை
கவர்ந்த நூல் எது?
கண்காட்சி சமயங்களில்
பல புத்தகங்களை நான் சேகரித்துக்கொள்கிறேன். அவசரமாக அவற்றை வாசிப்பதில்லை. என் அடுக்கில்
தூங்கியவண்ணமிருக்கும். நான் படைப்புகள் எழுதத்துவங்கப்போகிறேன் என்கிற சமயத்தில் அவற்றை
தொடர்ந்து வாசிக்கத் துவங்கிவிடுகிறேன். சமீபத்தில் புதிதாக எழுதிவெளியிட்ட ஆசிரியர்களின்
புத்தகங்கள் வரை வாசித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பில் நண்பர் யூமாவாசுகியின் அனைத்து
முயற்சிகளும் சிறப்பாக இருக்கின்றன. வானவில் பறவையின் கதை, பெனி எனும் சிறுவன், மின்மினிக்காடு
எல்லாமும் மிகச்சிறந்த படைப்புகள். சமீபத்தில் எனைக்கவர்ந்த புத்தகங்கள் பாரதி புத்தகாலயம்
வெளியீட்டில் வந்த ‘குழந்தைகளும் குட்டிகளும்’. புத்தகத்தில் ஓநாய்க்குட்டிகளை சிறார்கள்
வளர்க்கிறார்கள். அடுத்ததாக புலி, கழுதை, மான், குதிரை என வளர்ப்பது திடீரென எனக்குள்
உறைத்தது. இந்தப்புத்தகத்தில் சாத்தியப்படாத விலங்கினங்களை வீட்டு விலங்கினமாக வளர்க்க
ஆசைப்படும் சிறார்களை அவர்களின் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் காண்கிறேன். அடுத்ததாக
‘ஜப்பானிய தேவதைக்கதைகள்’ ஆதி பதிப்பகம் வெளியிட்ட புத்தகம். 22 கதைகளை உள்ளடக்கிய
இந்தப்புத்தகம் வாசிப்பு சுவாரஸ்யத்தை எனக்குள் கூட்டியது. வாசிக்க எப்போதும் சலிப்பூட்டாதகதையெனில்
விக்ரமாதித்யன் கதைகள் தான். இதில் மேஜிக்கல் ரியலிசத்திலிருந்து எல்லாமுமிருக்கிறது.
ஒரு நூலின் தலைப்பில் ‘பேசும் எலியும் குழந்தைப்பேயும்’ என்று
வைத்திருக்கிறீர்கள். குழந்தையை பேய் என்று சொல்வது சரியா?
அந்தப்புத்தகத்தில் டெங்கு
காய்ச்சலால் இறந்த பாப்பா ஒன்று வீட்டினுள் தலைகீழாக பறந்துகொண்டிருக்கிறது. வீட்டுக்கு
குடிவந்த மாலா பாப்பா அதனுடன் பேச முயற்சிக்கிறாள். அதற்கு எலி உதவுகிறது. பேப்பரில்
மாலா பாப்பாவின் கைகளை இயக்குகிறது. தன் பெயரை எழுதிக்காட்டுகிறது. பின்பாக அதற்காக
புறாக்கள் இரண்டை கூண்டினுள் வாங்கி வருகிறாள் மீனா பாப்பா. பாப்பாவின் ஆத்மா ஒரு புறாவினுள்
சென்றதும் அது பேச ஆரம்பித்துவிடுகிறது. நீங்களும் பாப்பம்பட்டி சென்றால் அந்தப்புறாவிடமும்,
எலியுடனும் பேசிவிட்டு வரலாம்.
சிறார் இலக்கியம் பற்றி உங்கள் கருத்து? சிறார் இலக்கியத்தில்
செய்ய வேண்டிய மிக முக்கியமான முன்னெடுப்பு என்றால் அது என்ன?
எல்லோருமே சிறார் இலக்கியத்திற்கான
தேவையை இப்போது உணர்ந்திருக்கிறார்கள். இது இன்னமும் வளர்ச்சியடைய வேண்டும். இந்தப்பணியில்
முழுமூச்சாக இறங்கியிருக்கும் பாரதி புத்தகாலயம் வாயிலாகத்தான் இது சாத்தியமாயிற்று.
சிறார் இலக்கியப்படைப்புகள் இன்னமும் நிறைய வரவேண்டும். வாசிப்பை நுகர்ந்த பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்களை அன்புப்பரிசாக வாங்கியளிக்க வேண்டும்.
வருடம் ஒருமுறை ஆரம்ப
வகுப்புகளுக்கு மாற்றி மாற்றி சிறந்த சிறார் புத்தகத்தை பாடமாக வைக்க வேண்டும். அரசாங்க
நூலகங்களில் வசதி படைத்தவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு 100 பிரதிகளேனும்
வாங்கி அளிக்க வேண்டும். அது வருடம்தோறும் தொடர வேண்டும். பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை
வாங்கிக்கொடுக்க இளைஞர் மன்றங்களோ, ரசிகர் மன்றங்களோ செயலாற்ற வேண்டும். நூலக வாசிப்புக்கு
வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிகளில் வகுப்பு இருக்க வேண்டும்.
உங்கள் படைப்புகள் வழியாக சிறார் இலக்கியத்திற்கு நீங்கள்
செய்யவிருப்பது என்ன?
எந்தக்கதைகளும் வெறுமனே
எழுதப்படுவதில்லை. எல்லாக்கதைகளும் ஒரு கருவை சுமந்துகொண்டு அதன் வெற்றிப்பாதையில்
செல்லவே புறப்படுகின்றன. பெரியவர்களைப்போல ’இந்தக்கதையில் ஒன்னுமேயில்லை!’ என்கிற ஒற்றை
வரி விமர்சனத்தை எந்தக்குழந்தைகளும் சொல்வதேயில்லை. ‘நான் முன்னமே படிச்சிருக்கேன்..
அது சூப்பர் கதை தெரியுமா!’ என்று பேசும் பிள்ளைகளைத்தான் காண்கிறேன்.
சிறார் இலக்கியங்கள் பல்வேறு
வடிவங்களில் எழுதப்பட்டு நமக்கு கிடைக்கின்றன. அவற்றிலிருந்து தனித்த ஒரு சொல்லல்முறையை
பயன்படுத்த ஆசைப்படுகிறேன். ஒவ்வொரு படைப்பும் முடிந்தபிறகு திருப்தியாக இருப்பதாய்
எப்போதும் நான் சொல்வதில்லை. எனக்கு எல்லாப்படைப்புகளிலும் போதாமைகள் இருக்கத்தான்
செய்யும். அதுதான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது.
000
புத்தகம் பேசுது ஆகஸ்டு 2023 இதழில் வெளிவந்தது.
000