ஐம்பேரியற்கை
மாற்கு
தமிழில் விதம் விதமான கதைக்களன்களில் நாவல்கள்
எழுதப்படுகின்றன. நாவலாசிரியரின் கற்பனை வளம் எந்தத்
தூரத்தில் இருக்கிறது என்பதையெல்லாம் தமிழ் வாசகர்கள் படித்துணர்ந்து விட்டார்கள்.
சமீப காலங்களில், தாடி வைத்த பச்சைத் துண்டுக்காரர்
முன்பு சொன்ன “நிலத்தை உழும் டிராக்டர் சாணி போடுமா?”
“நிலத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் சாணத்தை உபயோகியுங்கள்”
என்றெல்லாம் பேசப் போக மக்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள்.
பிடித்தும் பிரயோசனம் இங்கெதுமிவில்லை. ஆசைப்படும்
போது மழை இல்லை என்கிற நொட்டைக் காரணம் சொல்லி அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நிலத்தை
விற்று பணத்தை டெபாசிட் செய்து விட்டு ஏசி காரில் போகிறான் என்று தானும் விற்று அழித்த
நிலத்தை இப்போது திரும்பிப் பார்க்கிறான். அங்கே மிகப் பெரிய
ஆலை ஒன்று உருவாகி தன் கூம்புக் குழாய்கள் வழியே ஊர் முச்சூடும் புகையை விதைத்துக்
கொண்டிருப்பதை கண்ணால் பார்த்து வருத்தப்பட்டு காரில் ஏசியை அதிகப்படுத்தி விட்டு கிளம்புகிறான்.
இந்த நாவல் சொல்ல வருவது அனைத்தும் நாம் கண்கூடாக
அனுபவித்துக் கொண்டிருப்பது தான். மருந்து மாத்திரைகளை விற்பனை
செய்ய மருந்துக் கம்பெனிகள் தாராளமாக மக்களைக் காக்க மருந்துகளை தயாரிக்கின்றன.
மக்களை அவசரத்திற்கு வரவழைக்கும் மருத்துவமனைகள் மனிதனின் மொத்த உடலையும்
புறட்டி எடுத்து பலவித நோய்கள் நோயாளிக்கு இருக்கிறதாக உறவினர்களிடம் சொல்கின்றன.
உறவினர்கள் பதறுகிறார்கள். ஒரு உடலை வைத்து வைத்தியர்கள்
பல மருந்து மாத்திரைகளை விற்பனை செய்ய துவங்கி விடுகிறார்கள். நோயாளி வெற்றுக் காய்ச்சலுக்கு சென்றிருந்தாலும் அவனே அறியாத பல வியாதிகள்
தன் உடலில் ஒட்டியிருப்பதை கண்டுணர்ந்து சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பின் என மாத்திரை வில்லைகளை விழுங்குகிறான். அவனுக்கு தன் சாவை தள்ளிப் போடும் ஆசை மனதில் நுழைந்து விட்டது தான் காரணம்.
எல்லோரும் இங்கே வாழவே ஆசை கொள்கிறார்கள். அது
ஸ்டாலினோ, ஓ பி எஸ் சோ, இ பி எஸ் சோ,
ராமசாமியோ, சசிகலாவோ, மணிமேகலையோ!
மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே வந்தால் முதலாக கிட்னி பழுதாகும் என்பதை
மாத்திரை சாப்பிடுவோரும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதே இங்கே கொடுமை.
மனித வாழ்வில் முன்னெப்போதுமே இருந்திராத சக்கரை, ரத்த அழுத்தம் இவைகளுக்கு மருந்துகள் தயாரிக்கும் மருந்துக் கம்பெனிகள் ஏராளம்.
என் தாத்தனிற்கு கம்மம் புழுதண்ணி, ஒரு பச்சை மிளகாய்,
ஒரு குண்டா களி உருண்டை புளிச்ச தண்ணி ஒரு பச்சை மிளகாய் இது தான் மூன்றுவேளை
உணவு. இது தான் இயற்கை உணவு என்று சிலர் சொல்லப் போக மக்கள் உயிரைக்
காப்பாற்றிக் கொள்ள உடனே அதை நோக்கிப் படையெடுக்கிறார்கள். நாய்ப்
பீயை கரைத்துக் குடித்தால் உடலில் ரத்த அழுத்தம் குறைகிறது என்றொரு ஸ்டேட்மெண்ட்டை
நான் சொன்னால் உடனே அதை குடிக்க மக்கள் தயாராவார்கள். வா.மு.கோமுவே சொல்லிட்டான். அவன் கிராமத்தான்.
அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று!
மக்களுக்கு யாரேனும் எதையேனும் சொல்லிக் கொண்டேயிருக்க
வேண்டும் அவர்களாக எதையும் செய்ய மாட்டார்கள். இந்த நாவலின்
கதாநாயகன் அந்தஸ்த்தில் இருக்கும் கலெக்டர் ஒரு இயற்கை வாழ் கிராமத்திற்கு செல்கிறார்.
அந்த வாழ்க்கை முறையை அங்கே அந்த மக்களின் விளக்கங்களோடு கேட்டறிந்து
தன் பதவியை ராஜினாமா செய்கிறார். எங்கேயும் எப்போது நடக்க இயலாத
ஒழுங்கான வடிவமைப்பிற்குள் அமைந்த புதினம் இது! இந்த நாவல் இயற்கையை
வேறொரு பார்வையில் பேசுகிறது. எல்லோரும் ஆசைப்பட வேண்டுமெனச்
சொல்கிறது. ஆட்சியாளர்களின் இலவச கொடுப்பினைகளை இந்த கிராமம்
நிராகரிக்கிறது. தேர்தல் சமயத்தில் டிவி பொட்டி கொடுத்தால் வேண்டாமென்கிறது.
நீ யார் எனக்கு பிச்சை போட? என்று எதிர் கேள்வி
கேட்கிறது இந்த கதை நிகழும் கிராமம்.
கதை நிகழும் கிராமத்தில் சிமெண்ட் கலவைகளில் உண்டான
அரசாங்க இலவச வீடுகள் இல்லை. அரசாங்கம் சாலை போட்டுத்
தர வந்தாலும் நிராகரிக்கிறார்கள். அவர்கள் செருப்பணிந்து நடப்பதில்லை.
(இதெல்லாம் ஹீலர் பாஸ் பிரச்சனையோ?) அரசாங்கம்
அங்கே சாலை போட முயற்சிப்பதே அருகிலிருக்கும் உயர்ந்த மலை. அதில்
உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள். அவைகளை தூக்கிப் போக நான்கு,
எட்டு சக்கர வாகனங்கள் செல்ல வழி தேவை! அதை அந்த
கிராம மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். குழந்தைகளின் கல்வி இயற்கை
சார்ந்தே இருக்கிறது கிராமத்தில். அவர்களுக்கு நசுக்கி முகர்ந்து
பார்த்து தலை இலையின் பெயரைச் சொல்ல கற்பிக்க ஒரு நபர் கிராமத்தில். சிறியா நங்கை! வாடை தெரிகிறது! ஆசிரியர் சாப்பிட்டு பார்த்து சுவை என்றொரு பகுதியையும் சேர்த்திருக்கலாம்!
இந்தப் புத்தகம் அரசாங்க நடவடிக்கைகளை நிச்சயமாக்
ஒவ்வொரு இடத்திலும் சாடுகிறது! முன்பாக இயற்கை சார்ந்து
நான் முழுதாக வாசித்த நாவல் எழுத்தாளருக்கு பைசாக்கு பிரயோசன் பெறவில்லை (காசு, பணம்) என்றாலும் பதிப்பாளருக்கு
காசு பார்க்கச் செய்த காடோடி நாவல். அது இயற்கை அழிவை முகத்தில்
குத்தினாற் போல சொல்லிய புத்தகம். இந்தப் புத்தகம் ஒரு கற்பனை
கிராமம். ஈரத்துணியில் விதைகளை கட்டி வைத்து முளை விட்ட பிறகு
உண்கிறார்கள்! அவர்களே அரசாங்க உதவிகளை வேண்டாமென மறுக்கிறார்கள்.
படிப்போருக்கு ஆசை எழும். இப்படி ஒரு கிராமத்தில்
வாழலம், வாழ்ந்து பார்க்கலாம் என்று. ஆசிரியரின்
வெறி அது தான். ஆனால் அதற்கு இங்கே வாய்ப்பேயில்லை என்பது ஜீரணம்
செய்ய வேண்டிய உண்மை.
நாவலில் நாயகி என்றறியப்பட்ட பெண் கனவு காணும்
ஒரு பகுதியை அவளே சொல்கிறாள். கிராமத்தின் குழந்தைகளை வண்டலூர்
ஜூ விற்கு அக்கிராம மக்கள் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார்கள். அடுத்த நாள் அங்கே செல்ல வேண்டும். இவள் அந்த ஆசையில்
தூங்குகிறாள். இவளை முதலாக ஒரு சிங்கம் வந்து பார்த்துச் செல்கிறது.
அடுத்து ஒரு புலி, அடுத்து அடுத்தென பல விலங்கினங்கள்
பார்த்துச் செல்கின்றன. இவளும் ‘என்னடா
இது? நாம் விலங்கினங்களை பார்த்துச் செல்ல வந்தால் அவைகள் நம்மையே
தேடி வந்து பார்த்துச் செல்கின்றன?’ என்று பார்க்கையில் இவளே
ஒரு கூண்டினுள் இருக்கிறாள். அசாத்தியமான சிந்தனைகளை உள்ளே தக்க
வைத்திருக்கும் நாவல் இது. இந்த நாவல் சொல்ல வருவதெல்லாம் மனிதனின்
தெரியாத்தனமான, தப்பிதமான ஆசைகளை!
குழந்தைகள் தாங்கள் வளர்க்கும் செடிகளோடு பேசுகிறார்கள். தொட்டால் சிணுங்கி செடியை தடவித் தடவி பேசி வளர்க்கிறாள் ஒரு சிறுமி.
ஒரு கட்ட்த்தில் அவள் தொடுகையில் செடி சுருங்கி விடுவதில்லை.
செடி என்னை தொந்தரவு பண்ண வேண்டாமென கும்பிடுவதாக அந்தச் சிறுமி உணருகிறாள்.
தடவித் தடவி பேசிப் பேசி வளர்க்கும் கத்தரிச்செடி அதிக காய்களை தருவதாகவும்
நாவலில் வருகிறது. செடிகளில் பூச்சிகளை விரட்ட கற்றாழை,
வேம்பு, எருக்கு, ஊமத்தை
இவற்றை கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாவல் முழுக்கவும்
பேசுவதற்கு தயாராய் ஒவ்வொரு கேரக்டரும் வந்து கொண்டே இருக்கிறது. கேள்விகள் பதில்கள் என தொடர்ச்சியாக வருகையில் ஒரு கட்டத்தில் சலிப்பு தோன்றுவது
போலிருக்கிறது. (கடைசியில் வரும் இரவு நேரத்தில் பறையடித்து ஆடல்
பாடல். இது வலிந்து திணிக்கப்பட்டது போன்றொரு தோற்றம் அல்லது
அதீதம்)
உயர்ந்து நிற்கும் பனை மரங்கள், மேய்ச்சல் பொட்டல் நிலங்கள், பனையிலிருந்து கள் இறக்கிக்
குடித்தல், மண் பானைகளை பயன்படுத்துதல், என்று இயற்கையை நாடும் இந்த நாவலுக்கு ஐம்பேரியற்கை என்று தலைப்பிட்ட மகுடேசுவரனுக்கும்
வாழ்த்துக்கள்!
தமிழினி வெளியீடு, விலை :- 300.
000