மனைமாட்சி - நாவல்.
எம்.கோபாலகிருஷ்ணன். தமிழினி
வெளியீடு.
மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்த நாவல் மூன்று வெவ்வேறு நாவல்களைத் தான் தாங்கி வந்திருக்கிறது. மூன்றிலும்
ஒரு புள்ளி சேர்கிறதென்றால் அது குடும்ப உறவின் சிக்கல்கள் தான். ஆணாதிக்க சமூகத்தில் மறைமுகமாக குடும்ப உறவுகளில் பெண்ணாதிக்கமும் இருக்கிறது
என்பதை ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. அருகருகே இருக்கும் வீட்டார்கள்
ஓரளவு அறிந்திருப்பார்கள் என்றாலும் அவர்களாலும் எதுவும் செய்ய இயலுவதில்லை.
பெண்ணானவள் சமயத்திற்கு தகுந்தபடி பச்சோந்தி போல் நிறம் மாறுவாள் என்பதை
பொட்டில் அடித்தாற் போல பேசும் புத்தகம் இது.
இரண்டு பாகங்களில் இரண்டிரண்டு கிளைக் கதைகள். அது நாவலை வளர்த்திச் செல்ல ஆசிரியருக்கு உதவுகிறது. ஆக ஐந்து கதைகள் என்று கூட நாம் பிரித்தறியலாம்.
முதல் பாகத்தில் வரும் தியாகுவிற்கு இரண்டு பெண் குழந்தைகள்.
அவனுக்கு மைல்ட் ஸ்ட்ரோக் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.
அவனது மனைவி சாந்தி. மருத்துவமனையில் கணவனுக்கான
அனைத்து பணிவிடைகளையும் செய்யும் மனைவியாகவும், கணவனது நண்பன்
செந்திலிடம் புலம்பும் பெண்ணாகவும் அறிமுகமாகிறாள். அவள் தான்
கணவனை தன் முந்தானையில் முடிந்திருக்கிறாள். அவ்வப்போது இரும்புக்
கம்பியிலும், அயர்ன் பாக்ஸிலும் கணவனுக்கு சூடு இழுகிறாள். அவளது தேவைகள் அனைத்தும் ஆடம்பரம் ஒன்றே. கணவனை துன்புறுத்துவதில்
உச்ச பட்ச யோசனைகளுக்கெல்லாம் கதை வழியே செல்கிறாள். படிக்கும்
நமக்கெல்லாம் மீடியா தியாகுவின் வீட்டு வாசலில் நிற்கையில் அதிர்கிறது. கடைசியாக தியாகு தன் குழந்தைகளுடன் தந்தையாரிடம் அடைக்கலமாகிறான். கமர்சியல் நாவல் போன்று ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்து நிறைவடைகிறது ஒரு குடும்ப
வாழ்க்கை.
இதில் இரண்டாவதாக வைத்தியநாதன் என்கிறவரின் கதையோட்டம். ராஜத்தை வைத்தியநாதன் மனைவியாய் அடைகிறார். ராஜம் வெறும்
கையில் பால் பாத்திரத்தை எடுக்கிறாள். காய்கறி நறுக்குகையில்
கையில் கத்தி பட்டு ரத்தம் வடிகிறது. வலியில்லை என்று குடும்ப
உறுப்பினர்களிடம் சொல்கிறாள். குடும்ப உறுப்பினர்கள் ராஜத்திற்கு
இல்லாத வியாதி இருப்பதாய் சொல்லி பிறந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கின்றனர். வைத்தியநாதன் மங்களாவை கைப்பிடிக்கிறார். கணவனின் நினைவாக ராஜம் மெஸ் நடத்திக்
கொண்டு அவள் ஊரில் இருப்பதாகவும்.. வைத்தி அவளைக் காணச் செல்வதாகவும்..
கதையோட்டம் மலையாளத் திரைப்படம் போன்று ஊர்ந்து செல்கிறது.
இரண்டாவது பாகம் அசத்தலாக ஆரம்பிக்கிறது. சாப்பாட்டுப் பிரியனான மகாதேவன் தன்
புதுமனைவியை சாலையில் நிற்கவைத்து விட்டு ‘இதோ வந்து விடுகிறேன்’
என்று சொல்லி சென்று விடுகிறான். புது மனைவி மதுமதி
சலித்துப் போய் கிளம்புகையில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனைப் பார்க்கிறாள்.
அத்தோடு பெட்டி கட்டிக் கொண்டு பிறந்தகம் சென்று விடுகிறாள்.
மகாதேவன் தன் தவறை உணர்ந்திருந்தாலும் பசிக்கு சாப்பிட்டதுக்கெலாம் ஒரு
மனைவி கோபித்துக் கொண்டு போய்விடுவாளா? என்றே யோசிக்கிறான்.
அவனுக்கென்று கோவிலில் பாடும் ஒரு துணை அமைகிறது. இருவரும் டைவர்ஸ் பெற்றுக் கொள்கிறார்கள். மதுமதிக்கும்
துணை அமைகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வரும் கதையோட்டம் எனக்கு
தி.ஜானகிராமனையும், பாலகுமாரனையும் சேர
வாசித்துக் கொண்டிருக்கும் அனுபவத்தை கொடுத்தது.
மூன்றாவது பாகம் தான் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் தனித்துவமான வீரியமான எழுத்து. அமராவதி
ஆற்றில் இரு சிறுசுகளை ஈன்றெடுத்த வினோதினி கணவன் ஆனந்தகுமாரை பலி கொடுத்து விதவையாகிறாள்.
ஆனந்தகுமாரின் தம்பி சிவக்குமார், அவனது மனைவி
கண்ணம்மாவிற்கு குழந்தைகள் இல்லை. சிவக்குமார் அணியின் மீது ஆசை
கொள்கிறான். கண்ணம்மா தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து
வீதியில் மானம் கெட பேசுகிறாள். சொத்துக்களை பிரித்துக் கொள்கிறார்கள்.
வினோதினி தன்னை முதலாக காதலித்த லோகுவை கைப்பிடிக்க சம்மதிக்கிறாள்.
கிளைக்கதையாக துவங்கி ஓடும் மற்றொரு கதையில் பெங்களூருவில்
வாழ்க்கையை துவங்கும் கணவன் கண்ணபிரான் மற்றும் அவனது மனைவி வாணி பற்றியது. ‘அப்பா அம்மா கட்டாயத்துல தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு இதுல இஷ்டமில்லே!’ என்று துவங்கும் வாணி ஊரில் சசி என்கிற மலையாளத்தானை காதலிக்கும் விசயத்தை
கணவனிடம் சொல்கிறாள். இவர்களின் கதையைச் சொல்கையில் எழுத்தாளரின்
எழுத்து வேகமாய் பயணிக்கிறது. சொல்ல வருவதை சுத்தமாகவும் சொல்கிறார்.
சசியுடனும் கணவன் கண்ணபிரானிடமும் வாணி படுக்கையை
பகிர்ந்து கொள்கிறாள். கடைசியில் பெங்களூரிலிருந்து மூட்டை முடிச்சுகளுடன்
சசியுடன் சொந்த ஊரும் செல்கிறாள். ஆனால் சசிக்கு வேறு இடத்தில்
மணமாகி விடுகிறது. இந்த நேரத்தில் இருவருமே டைவர்ஸ்க்கு முயற்சித்திருக்க..
வாணி கர்ப்பஸ்திரியாகிறாள். அவளுக்கே குழப்பம்.
கரு இருவரில் யாருடையது என்று? இறுதியில் கணவனுடனேயே
(பச்சோந்தி) வாணி இணைவதாய் நாவல் சுபம் என்று முடிகிறது.
நாம் நிம்மதியாய் தியேட்டரை விட்டு வெளியேறுகிறோம்.
ரமணிச்சந்திரன் நாவல்களில் தான் முதலிரவில் கணவனிடம்
படுக்க மாட்டாமல் அழும் பெண்களை நாம் முன்பாக வாசித்திருப்போம். போக அந்தப் பெண் தன் காதலனைப் பற்றி கணவனிடம் தெரிவிப்பாள். கணவனும் மனைவியின் அழகைப் பருகிக் கொண்டே அவளுக்கு ஒத்துழைப்பதாய் கதை சென்று
கொண்டிருக்கும். ரமணிச்சந்திரன் கதைகளில் நாயகி என்றுமே காதலனிடம்
படுக்கையை பகிர்ந்திருக்க மாட்டாள். கடைசியாக பெண்கள் அனைவரும்
மகிழ்ச்சி அடையும் விதமாக கணவனின் தோள் மீது மனைவி சாய கதை சுபமாகும். இது எதற்கு என்கிறீர்களா? எல்லாம் போகிற போக்கில் குடும்ப
நாவல்னா அப்பிடித்தான்யா!
-விலை 580